திக்கற்றவைகளின் பரிகாசக்காரன் கவிஞர் இசை :



வசனத்தை உடைத்துப் போடுவதல்ல புதிய கவிதை. பொருளம்சத்தினால் மட்டுமே நிர்ணயிக்கப்படுவதுடன், வசனத்துக்கு எட்டாத கவித்துவத்தை கொண்டிருப்பதால்தான் புதிய கவிதையாகிறது.

~ பிரமிள்.

இன்றைய உலகில் குழந்தைகளை விட அதிகமாக பிரசவிப்பது புதிய கவிதைகள் தான். அதாவது வசனத்தையை உடைத்து உடைத்து எல்லோரும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். படித்தவன் படிக்காதவன் என்றெல்லாத பாகுபாடின்றி கவிதை அனைவரையுமே கவருகிறது. அதனாலேயே எல்லோரும் முயற்சித்து பார்க்கிறார்கள். இசை எழுதும் கவிதைகள் கூட வசனத்தை உடைத்துப் போடுவது மாதிரி தான் தெரியும். ஆனால் சில வரியில் கவித்துவம் ஆகும் வரியையும் அதனுடன் சேர்த்து எழுதுவது தான் அவரை சாதாரணமாக என்டர் பட்டனை தட்டி தட்டி எழுதும் கவிஞர்களிடமிருந்து பிரித்து காட்டுகிறது.



தனது சிவாஜி கணேசனின் முத்தங்கள் தொகுப்பின் முன்னுரையில் இசை பின்வருமாறு குறிப்பிடுகிறார். //கவிதை என்பது" என்று துவங்கி ஏதாவது சொல்லலாம். உங்களுக்கு போர் அடிக்கும். நீங்கள் தான் எத்தனை "கவிதை என்பது" வை கேட்டு விட்டீர்கள், எத்தனை எத்தனையோ பேர் என்னென்னவோ சொன்ன பிறகும் இன்னும் சொல்ல ஏதேனும் மிச்சமிருப்பதுதான் கவிதையின் அழகா? // நானும் இதற்கேற்றார் போல மேலே ஒரு “கவிதை என்பது”வை எழுதிவிட்டேன். இந்த தொகுப்பையும் அவரது வலைத்தளத்தில் படித்த கவிதைகளை பற்றியும்.

இசையை நகைச்சுவையாக எழுதுவார் என்று சொல்வதுண்டு. அவரது கவிதைகளை முகநூலில் பதியும் போது  ஹாஹா ரியாக்க்ஷன்கள் அதிகம் வருவதை காணலாம்.இலக்கியத்தில்  வெறும் ஜோக்குகளுக்கு இடமில்லை. ஆனால் அங்கதத்திற்கு ( Satire)  இடமுண்டு. இசையின் கவிதைகள் ஜோக்கிலிருந்து மேம்பட்டு அங்கதத்தில் அலைபாய்பவை. அதுதான் அவரது பலம். அதுதான் அவரை மற்ற கவிஞர்களிடமிருந்து தனித்துவமான ஒருவராக ஆக்குகிறது. மேலும் அவரது கவிதைகள் மிகவும் எளிமையாக இருப்பது கூடுதல் சிறப்பு. ஏனெனில் தெள்ளத் தெளிந்தவனின் எண்ணம் தூய ஸ்படிகமாக இருக்கும் என்பது என் கணிப்பு.

இந்த தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த “ஒரு குள்ளமான காதல்” கவிதையைப் பார்ப்போம்.

ஒரு கோடி முத்தங்களில்
ஒரு துளியூண்டு முத்தம்
கடைசியில் தான் ஒரு முத்தமே இல்லை என்று
விலகிக்கொள்கிறது.

எண்ணற்ற சொற்களில்
ஒரு நொண்டிச் சொல்
பாதியில் விழுந்து கதறுகிறது.

எவ்வளவோ பரிசுகளில்
ஒரு பரிசு
பழைய துணியில் சுற்றிக்கட்டப்பட்ட அவல்.
அது தயங்கித் தயங்கி நகர்கிறது.

எத்தனையோ ஸ்பரிசங்களில்
ஒரு ஸ்பரிசம்
சந்தேகங்களில் உழல்வது
அது தொட்டோமா இல்லையா
என்று தெரியாமல் குழம்புகிறது.

நூறு காதல்களில்
ஒரு காதல் ரொம்பவும் குள்ளமானது
அது தன் கையை உயர்த்திக்காட்ட வேண்டியிருக்கிறது.

இன்னொரு சிறப்பசமாக இசை உபயோகிக்கும் மொழியை சொல்லலாம். நவீன வாழ்க்கையில் அன்றாடம் பயன்படுத்தும் சொற்களை கொண்டும் கவிதை இயற்றுவது ஒரு வரலாற்று ஆவணமாக மாற்றமடைகிறது. மற்றெல்லா கவிஞர்களும் வேறொரு மொழியின் பாதையில் செல்லும் போது நிகழ்காலத்தின் மொழியில் பயணிக்கும் இசை இதிலும் தனித்துவமானவராக மிளிர்கிறார். உதாரணமாக பல்சர் கவிதைகள், ஸ்கூட்டிகள் மிதக்கும் கனா போன்றவை. இன்னும் குறிப்பாக சொல்லப்போனால் கீழே வரும் இந்த கவிதையை சொல்லலாம். ஆனால் இது இந்த தொகுப்பில் இல்லை. அவரது வலைத்தளத்தில் படித்தேன். இசையின் ஒட்டுமொத்த கவிதையை புரிந்து கொள்ள இந்த ஒரு துளி கவிதை கச்சிதமாக பொருந்துவதாக உள்ளது. எளிமையாக புரியும் படியாக உள்ளதால் இதில் படம் வரைந்து பாகங்கள் குறிக்க தேவையில்லை. அதே சமயம் எளிமையாக இருப்பதால் இவற்றை எளிதில் புறக்கணிக்கவும் முடியாது.


நள்ளிரவு 2:00 மணிவாக்கில்
உன் புகைப்படத்தை
என் Dp- யாக வைத்தேன்

பெருந்திணை
அன்பின் புறநடையென்பதால்
உடனே
அஞ்சி அகற்றி விட்டேன்.

ஒரு முக்கால் நிமிஷம்
நீ என் உரிமையில் இருந்தாய்.

அதற்குள் யாரேனும் பார்த்திருப்பார்களா?
நடுசாமத்தில் யார் பார்க்கப்
போகிறார்கள்?

ஆனாலும்
யாரேனும் பார்க்கத்தானே வைத்தேன்.
ஒருவர்  கூடவா
பார்த்திருக்க மாட்டார்கள்?

நல்லவேளை
நீ குளோசப்பில் சிரிக்கவில்லை
எனவே,எந்தக் கண்ணிலும் விழுந்திருக்காது
ஒரு கண்ணிலுமா விழுந்திருக்காது?


இந்த தொகுப்பில் ‘குத்துப் பாட்டின் அனுபூதிநிலை’ என்றொரு கவிதை. குருவி படத்தில் வரும் மொழ மொழனு யம்மா யம்மா என்ற பாடலுக்கு இசை தனது வீட்டைப்பூட்டிக் கொண்டு எகிறியிருப்பாரென்றே தோன்றுகிறது. பல்சர் பைக்குகள் ஸ்கூட்டிகள் இந்த குத்துப் பாட்டு எல்லாம் அந்தந்த காலகட்டத்தின் ட்ரெண்டிங்கை குறிப்பிடுகிறது. இது வெறுமனே ட்ரெண்டிங்கை மட்டுமே சொல்லாமல் அது மேலும் விரிவடைந்தது கவிதையாக மாறுகிறது. உதாரணமாக இந்த குத்துப் பாட்டையே எடுத்துக் கொண்டோமானால் அதில் அவருக்கு குத்துப்பாட்டின் மீதும் அதை பாடிய அனுராத ஸூராமின் மீதோ அல்லது அவரது குரலின் மீதோ ஒரு கிறக்கம் இருப்பதை புரிந்துக் கொள்ள முடிகிறது. இந்த கவிதையின் கடைசி சில வரிகளை கொண்டு இது சாதாரணமாக ஒரு காலக்கட்டத்தை ஆவணபடுத்தாமல் கவிதையாக உருமாறுவதை பார்க்கலாம்.

எனதுளமா இது எனதுளமா
ஈனக்கவலைகள் எரியும் நெருப்பில்
ஜொலிப்பது என்ன
எனதுளமா ?
எனதுளமா ?

இசை உலக சினிமாவை பார்ப்பதோ உலக இலக்கியத்தையோ வாசிப்பதில்லை என்று அவரே சொல்லியிருக்கிறார். எதை செய்தாலும் சரியாக செய்ய வேண்டும் என்பதால் தமிழை தவிர்த்து எதிலும் கவனம் செலுத்தாமல் இருப்பதாக சொல்கிறார். அதேசமயம் அவர் சங்க இலக்கியங்களில் அதிக ஈடுபாடு உள்ளவராக தெரிகிறார். அநேகமாக அதுதான் அவரது கவிதைகளுக்கு திருப்பம் விழைவிப்பதாக தோன்றுகிறது. சாதாரணமாக வரும் சில வரிகளில் அசாதாரணமாக ஒரு வரி வருவதை இசையின் பெரும்பாலான கவிதைகளில் காணலாம். உதாரணமாக லட்சுமி டாக்கிஸ் கவிதையில் ஒரு பழைமையான திரையரங்கம் தொழிற்சாலையாக மாற்றப்பட்ட பிறகு வரும் கவிதையில் அடர்ந்த எழுத்துக்கள் இருக்கும் வரிகள் சிறந்த உதாரணம்.

“யாரோ ஒரு காதலன்
யாரோ ஒரு காதலியைக்
கூடம் முழுக்கத் துரத்திக்கொண்டிக்கிறான்
யாரோ ஒருத்தி ஓயாது விசும்பிக்கொண்டிருக்கிறாள்
யாரோ இருவர் அனல் பறக்கச் சண்டையிட்டனர்
சில சமயங்களில் பெரும் போர் மூண்டது.
இயந்திரங்களில் இருந்து அவ்வப்போது
விரக முனகல்கள் கேட்டன
சில நேர்மையான போலீஸ்காரர்கள்
விடிய விடிய ரோந்து வந்தனர்
அர்த்த ராத்திரியில் வெள்ளுருவொன்று
நறுங்குழல் விரித்து கொலுசதிர நடந்தது…”

சில கவிதைகள் உடைத்து போட்ட வசனமாகவே இருக்கிறது. அதில் பொருளம்சத்தை தாண்டிய ஒரு கவித்துவம் எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. உதாரணமாக நீ உன் முத்தத்தை உதட்டிற்குக் கொண்டு வா கவிதை.

ரயில் வந்துவிட்டது.
அதற்கு ஒன்றும் தெரியாது.
அது
வரும் போகும்.

“கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறது” என்ற கவிதையில் உலகத்தின் கீழ்மைகளை புறக்கணிக்கப்பட்ட மக்களின் ஏக்கங்களை சமாளிக்கும் கர்த்தர் வருவார் என்பதை தார்மீகமான கோபங்கொண்டு தனக்கே உரித்தான அங்கத மொழியில் அவரும் மக்களை நோக்கி சிறுமந்தையே கர்த்தர் on the way என்கிறார். கவிதை தற்கொலையின் ஜென்ம சத்ரு என்று ஒரு வரி வரும். கவிதை ஏன் எழுதுகிறோம் எனும்போது தற்கொலையில் இருந்து தப்பிவிடுவதற்கு கூட என்று சொல்லியிருக்கிறார். “திடீரென பீடித்துக் கொள்ளும் மனச்சோர்வு” செம்மத்தியான கவிதையிலையே சேரும். ஏனெனில் மனச்சோர்வு காரணமின்றி வரும். மேலும் அதை எந்தவித ரொமான்டிஸ பார்வையிலும் பார்க்காமல் அந்த மனநிலையில் உள்ளவர்களையும் சேர்ந்தே கலாய்த்திருப்பார். கலாய் என்பது இலக்கியப்பாஷை இல்லையே என்பவர்கள் ஒருபோதும் இசையின் கவிதையையும் புரிந்து கொள்ள முடியாது.


ரொமான்டிசப் பார்வைக்கு எதிராக எள்ளல் தன்மையுடன் அதை அணுகும் முறை என்றும் இசையின் கவிதைகளை பகுக்கலாம். “டம்மி இசை” யில் சாதாரண லௌகீக வாழ்க்கையைச் சார்ந்த 24*7 நரக வாழ்வில் இருந்து தப்பிக்க ஒரு நகலை உருவாக்குவார். நிறைய மனிதர்கள் தங்கள் நினைத்த வாழ்க்கையை வாழ முடியாமல் ஒரு டம்மியை உருவாக்கிவிட முடியாத என்ற ஏக்கத்துடன் தான் வாழ்வை கடத்துகிறார்கள்.

நாகர்கோவில் எக்ஸ்பிரஸில் பயணிக்கும் எறும்பு” கவிதை ஒரு சுய எள்ளலாக எழுதியிருக்கிறார். வேர், மண் போன்ற மிகையுணர்ச்சி மிக்க சொல்லாடல்களை எறும்பு விரும்புவதில்லை. ஆனால் இந்த மனிதன் அதிலேயே தான் உழன்று கொண்டிருக்கிறான் என்கிறார். குறிப்பாக இசை எதையும் போதிப்பதில்லை. அதற்கு மாறாக கருணையின்றி புனிதம் என்றெல்லாம் பாராமல் எள்ளல் தொனியுடன் காற்றில் ஏகத்துக்கும் கையில் கவிதை எனும் சொல்லால் சுழற்றுகிறார். “அறவுணர்ச்சி எனும் ஞாயிற்றுக்கிழமை” ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் கறிக்கடையில் உதயமாகும் மனித நேயர்களை முகவாய் கட்டை பிழக்கும் படியான , என்ன சொல்ல நேர்மையாக இருப்பதாக பாவனை காட்டும் நேர்மையை பிளக்கும் கவிதை எனலாம்.

குடும்ப நாய்” கவிதை மகத்தான கவிதை என்றே சொல்லலாம். தற்காலத்தில் திருமணம், குடும்பம் என்ற அமைப்பு மிகவும் விவாதத்திற்கு உட்படுத்தக்கூடியது. குடும்பத்திலேயே பேண்டு அதையே தின்று வாழும் குடும்ப நாய் என்பதனை விளக்க தனியாகவே கட்டுரை எழுதலாம். எல்லா அநீதிகளுக்கும் எதிராக இரண்டு முறை குறைத்து விடும் குடும்ப நாய் என்பதெல்லாம் வெறும் ஜோக்கு மட்டுமா. அதையெல்லாம் விரித்து புரிந்துக் கொள்ளும் வாசகன் உவகை அடையாமல் இருக்க முடியாது.

பிழையாக எழுதப்பட்ட
ஒரு வரியை
அழித்துக்கொண்டிருக்கிறான் சிறுவன்.
அதை அருகிலிருந்து பார்த்தபடியிருந்தவன்
தம்பி, இதுபோல்
14.3.2001ஐ அழிக்க முடியுமா
என்று கேட்டான்.
இது இங்க் ரப்பர்னா
எல்லாத்தையும் அழிக்கும்
என்றான் சிறுவன்.

இந்த கவிதையில் சிறுவனின் குழந்தை தனமும் காலத்தை அழிக்க முடியாத கையறு நிலையில் இருக்கும் சாதாரண ஒருவனின் மனநிலையும் சொல்லப்படுகிறது. மேலும் இதில் வரும் தேதி கவிஞரின் ஏதோ ஒரு தினத்தை முன்னிட்டு பேசுகிறார். எனக்கு தெரிந்த வரையில் இங்கு வரலாற்று முக்கியமான ஏதாவது ஒரு தேதியை குறிப்பிட்டிருந்தால் ( உதாரணமாக 19.5.2009 )கவிதையின் வீரியம் இன்னும் கூடியிருக்குமோ. அந்த வாய்ப்பை இசை நழுவி விட்டார் என்றே சொல்லலாம்.

காது வலி என்றொரு கவிதை. அதேபோல் கழிவிரக்கம் என்றொரு இத்தொகுப்பில் அடங்காத கவிதையும் ஒரேமாதிரியான ஈர்ப்பை தந்தது. அதாவது தனது துயரத்தை வலிகளையும் எள்ளளுடன் காதலிக்கும் ஒரு பண்பு. சமூகத்தில் இருந்து புறக்கணிக்கப்பட்ட அல்லது சர்வைவல் ஆஃப் தி பிட்டஸ்டு எனும் இயற்கையின் விதியில் வலுவிழந்திருக்கும் ஒன்றின் சார்பாக இருந்து பேசும் இசையின் கவிதைகள், தான் அப்படி இருந்து பேசுகிறேன் என்ற பச்சாதாபத்தை தூண்டாத எளிமையான கவிதைகள். சீரிய ஆன்மீக எழுச்சி உயர்ந்த கவித்துவ வரிகளும் உயர்ந்த எண்ணங்களையும் மட்டுமே சொல்வதில்லை கவிதை. அதற்கு நேர்மாறாக இருப்பவற்றையும் கவிதையாக எழுதிக் கொண்டிருக்கும் இசைக்கு இந்தத் தொகுப்பின் தலைப்பில் வரும் கவிதையைப் போல ஒரு முத்தத்தை கொடுக்க வேண்டும்.

சி.மணி தான் இதுபோன்ற கவிதைகளை முதன்முதலில் எழுதியிருக்கிறார். இப்போது அதை இசை தனிக்கே உரிய தனித்துவத்துடன் எழுதிக் கொண்டு வருகிறார். சி.மணியிடம் இருக்கும் சீரியஸான பகடிகள் சற்று வடிகட்டி அதனுடன் சுய எள்ளல் எனும் சீனி சேர்த்து எழுதிவரும் இசை சி.மணியின் நீட்சி என்பதையும் இதே டெம்ப்ளேட்டில் தேங்கி விட்டார் என்பதையும் மறுப்பதற்கில்லை.

உச்சாத்துணைகள் :

  1. சிவாஜி கணேசனின் முத்தங்கள். (2011, காலச்சுவடு பதிப்பகம், விலை ₹70)
  2. இசையின் வலைத்தளம் http://isaikarukkal.blogspot.com

Comments

Popular posts from this blog

தேவதேவனும் ஜென் கவிதைகளும்

ஜெ. சைதன்யாவின் சிந்தனை மரபுகள்- ஜெயமோகன்