‘இனி வேண்டியதில்லை’ சிறுகதையும் ‘ஆர்டிஸ்ட்’ எனும் மலையாள படமும் :


ஒருமுறை அசோகமித்திரனிடம் கேட்ட கேள்வி : உங்கள் கதைகளிலே எதில் பெண்ணை பற்றி சிறப்பாக எழுதியுள்ளதாக நினைக்கிறீர்கள் ?

பதில் - இனி வேண்டியதில்லை என்ற சிறுகதை.

பிறகு லைப்ரரியில் தேடி இந்த சிறுகதையை வாசித்தேன். எப்படி இந்த கதையை பற்றி யாரும் இதுவரை எழுதவே இல்லை என்று நொந்துக்கொண்டேன். மிக அருமையான கதை. வழக்கமான அசோகமித்திரன் ஸ்டைல் இதிலும் இருக்கிறது. ஒரு கதையுனூடகவே நிகழும் நிகழ்வுகளை சொல்லும் போது பிறிதொன்று மேலெழும்பி நிற்கும் கதை தான். இதில் பெண்ணின் ஆதியியல்பை பற்றி நறுக்கு தெரித்த மாதிரி விளக்குகிறார்.


பனிக்குடம் போல பெண்ணின் நம்பிக்கைகள் உடையும் புள்ளியை கொண்டு வந்து சேர்க்கும் விதம் அற்புதம். பெண் என்பவளின் பொறுமை எவ்வளவு ஆழமானது என்பதையும் அதன் உச்சத்தில் ஒரு breaking point வரும் என்பதையும் எந்தவித பிசிறும்  இல்லாமல் தெளிந்த நீரோடையாக எழுதியுள்ளார். வாழ்க்கையை எவ்வளவு நுட்பமாக அதிலும் ஆண் பெண் உறவுகளை எவ்வளவு நுட்பமாக கவனித்திருந்தால் இதை எழுத முடிந்திருக்கும்.

அசோகமித்திரனின் இந்த கதையை சுருக்கமாக சொல்ல முயற்சிக்கிறேன். கதாபாத்திரங்களின் பெயர்கள் நினைவில்லை. ஆண், பெண். இருவரும் சினிமா சம்பந்தப்பட்ட படிப்பு முடிந்ததும் சினிமாவில் வாய்ப்பு தேடி அலையும் வர்க்கத்தினர். இதில் ஆணை விட பெண் நன்றாக நடிக்க தெரிந்தவர். ஆணும் குறைச்சல் இல்லை. அவனுக்காக எதையும் செய்யும் பேரன்புக்காரி. வீடு, சுற்றம் என்ற எல்லாவற்றையும் அவனுக்காக புறந்தள்ளக்கூடியவள். அவளிடம் காசு இல்லை என்றாலும் எப்போதுமே அவனுக்கு சாப்பாடு, துணி எல்லாம் வாங்கித் தருவாள். அவனுக்கு அதைப்பற்றி எதிலும் ஈடுபாடு கிடையாது. அவனுக்கு சினிமா மட்டும் குறி. ஒருநாளும் செலவு செய்ததும் கிடையாது. அவள் அதற்காக எவ்வளவு தியாகம் செய்கிறாள் என்ற பிரக்ஞை கூட இல்லை அவனுக்கு. ஒரு புதிய இயக்குநரிடம் கால்சீட் கேட்டு அவள் அவனை அங்கு கூட்டி செல்வாள். அந்த இயக்குநருக்கு அவனை விட அவளையே பிடித்திருந்தது. அவளையே நடிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். ஆனால் அவள்,” நான் நடிக்க விரும்பவில்லை. இவருக்கு வாய்ப்பு கேட்டுத் தான் வந்தேன்”என்று சொல்லுவாள். அந்த இயக்குனர் அவளை நடிக்க வைக்க வேண்டும் என்றே குறியாக இருந்து விடுவார். பின்னர் அங்கிருந்து இருவரும் கிளம்பி விடுவார்கள்.

அவனுக்கு பெருத்த ஏமாற்றம். கோவம். அவளை திட்டி தீர்த்து விடுகிறான். அவளும் நாய்க் குட்டி போல பின்னாலயே போகிறாள். பின்னர் நடக்கும் நிகழ்வுகளை படித்து தெரிந்து கொள்ளுங்கள். இறுதியில் அவளது நம்பிக்கை எனும் பனிக்குடம் எப்படி உடைகிறதென்று வரும்.


இதே கருவில் ஒரு மலையாள படத்தினை பார்த்து அதிர்ந்து போயிருந்தேன். அது ஷியமால பிரசாத் இயக்கத்தில் வெளிவந்த Artist (2013) மலையாள திரைப்படம். இது மேலோட்டமாக பார்த்தால் ஒரு ஓவியரின் கதையைப் போல தெரியும். ஆனால் அதன் சாரம் அது அல்ல. அசோகமித்திரன் “ இனி வேண்டியதில்லை” என்ற சிறுகதையின் நீட்சி தான் இந்த படம். அந்த சிறுகதையில் சினிமா வாய்ப்பு தேடி அலைபவர்கள் இங்கு ஓவியர்களாக சுற்றுவார்கள். முதலில் இந்த படமே ஒரு நாவலின் தழுவல். அந்த நாவலின் பெயர் Dreams in Prussian Blue. இதை  Paritosh Uttam எழுதியிருக்கிறார். எனக்கு பெருத்த சந்தேகம் எழுந்துள்ளது. நிச்சயமாக இது அசோகமித்திரன் கதையைப் போலவேதான் இருக்கிறது. கரு மட்டுமல்ல அதன் முடிவும் அதை வெளிப்படுத்திய விதமும் ஒன்றாக தெரிகிறது எனக்கு.


ஏற்கனவே நண்பர்களிடத்திலும் பேஸ்புக்கிலும் சொன்னது தான். யாரும் இதை பெரிதாக கண்டுக் கொள்ளாதது வருத்தமாகவே இருந்தது. அசோகமித்திரன் எனும் மாபெரும் கலைஞனை இந்த மானிட சமூகத்திற்கு கிடைத்த அற்புதம் என்பதை உலகிற்கு காட்சிப்படுத்துவதை விடவா நமக்கு பெரிய வேலைகள் இருந்துவிடப் போகிறது. 

இதற்கு ஜெயமோகன் எழுதிய பதில். https://www.jeyamohan.in/107725#.WsOSwsvhU0M  நன்றி. 

Comments

Popular posts from this blog

தேவதேவனும் ஜென் கவிதைகளும்

ஜெ. சைதன்யாவின் சிந்தனை மரபுகள்- ஜெயமோகன்

திக்கற்றவைகளின் பரிகாசக்காரன் கவிஞர் இசை :