" பேர்யாழ் " என்ற கவிதைத் தொகுப்பு குளிர் காலத்தில் கனன்று கொண்டிருக்கும் தாயின் மார்பினில் உறங்கும் பச்சிளங்குழந்தை போல ஒரு கதகதப்பை தந்தது. இது குளிர் காலத்தில் படிக்கும் ஒவ்வொருவருக்கும் உண்டான உவமை மட்டுமல்ல. தேவதேவன் கவிதைகள் என்னை குழந்தை போல கள்ளமற்ற மகிழ்ச்சி அடைய செய்தது. தேவதேவன் கவிதைகளை சாதாரணமான செடி, கொடி, மரங்கள் பற்றிய அழகியல் கவிதை என்று சுருக்கி விட முடியாது. புத்தன்/ லாவேட்சு/ ஓஷோ கவிதை எழுதியது போல ஒவ்வொரு கவிதையிலும் அதன் ஞானச்சிதறல்கள் பட்டுத் தெறித்து உன்மத்தம் அடைகிறது. ஒவ்வொரு கவிதையும் பேரானந்தம். தமிழில் ஜென் கவிதைகள் ஒன்று உண்டெனில் அதில் இந்த தொகுப்பிற்கு முக்கியமான பங்கு வகிக்கும் என நம்புகிறேன். புரட்சி என்பது அகவயமானது என நம்புகிறேன். செயலின் ஊற்றுக்கண்ணான சிந்தனையை பாதிப்பதே எழுத்தின் முக்கியமான தொழிலாக நம்புகிறேன். இங்கு புரட்சியை புறவயமானது என்று பலர் நினைக்கக்கூடும். அது பகுத்தறிவோடு நின்று விடும். அதற்கு மேல் பயணிக்க வேண்டும் என்றால் நாம் உட்புறமாக திரும்பிச் செல்ல வேண்டும். தேவதேவன் கவிதைகள் அனைத்தும் அவரது இதயத்திலிருந்து பு...